ஊழல் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது அம்பலம்.. பதவி விலகுவாரா இஸ்ரேல் பிரதமர்?
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக காவல்துறை கொடுத்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். முன்னதாக, 1996-99 ஆகிய காலகட்டங்களில் அவர் இஸ்ரேல் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும், பெஞ்சமின் நெதன்யாகு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையின் அறிக்கையை நேற்று போலீசார் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், நெதன்யாகு பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
விசாரணை அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்கிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும் என்றாலும் கூட, பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தன் மீதான புகாரை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்து வந்தார். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தலைநகர், டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் மக்கள் திரண்டு பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.