முக்கிய திருப்பம்.. கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி ரெடி.. இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
ஜெருசலம்: கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்குவதில் நாட்டின் முக்கிய உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஒரு "குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை" அடைந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தாங்கள் கண்டுபிடித்துள்ள ஆன்டிபாடிக்கு காப்புரிமை பெறும் முயற்சி மற்றும் வெகுஜன உற்பத்தியை அவர்கள் துவங்கிவிட்டதாகவும் ஒரு நல்ல செய்தியை, நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
பென்னட் திங்கள்கிழமையான நேற்று, நெஸ் சியோனாவில், உள்ள கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐபிஆர்) ஆய்வகங்களை பார்வையிட்டார்.
கொரோனா பரப்பும் மையமாகும் மாஸ்கோ.. ரஷ்யாவில் மொத்த பாதிப்பில் 50% இங்குதான்!
காப்புரிமை
இதன்பிறகு அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா வைரஸை மோனோக்ளோனல் வழியில் தாக்கி, நோய் பாதித்தவர்கள் உடலை சீராக்கும் ஆன்டிபாடி உருவாக்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை கூறியது. ஆன்டிபாடியின் உருவாக்கம் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த நிறுவனம் தங்கள் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், அடுத்த கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச நிறுவனங்களை அணுகி ஆன்டிபாடியை வணிக நோக்கத்தில் உற்பத்தி செய்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யூத மூளை செயலாற்றல்
"இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஆய்வு நிறுவன ஊழியர்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூதர்களின் மூளை ஆற்றல் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்துள்ளது" என்று தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் நப்தாலி பென்னட்.
முதல் செய்தி
மார்ச் மாதத்திலேயே, இஸ்ரேலிய நாளேடான ஹாரெட்ஸ், மருத்துவர்கள் கூறியதாக கூறி, தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் உயிரியல் தன்மையையும், குணங்களையும் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்றும், ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்ய இந்த மருந்து தடுப்பூசியாக பயன்படும் என்றும் கூறியிருந்தது.
மனித ட்ரையல் நடந்துவிட்டதா
மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட அந்த செய்திக்கும், பென்னட் கூறியுள்ள இந்த ஆய்வுக்கும் தொடர்புள்ளதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. மனித பரிசோதனைகள் நடத்தப்பட்டனவா என்பதையும் அந்த அறிக்கையில் இஸ்ரேல் குறிப்பிடவில்லை. ஐ.ஐ.பி.ஆர் ஆய்வகம், 1952 இல் இஸ்ரேல் பாதுகாப்புப் படை பிரிவின் அறிவியல் படை என்ற ரீதியில் நிறுவப்பட்டது. பின்னர் அது ஒரு சிவில் அமைப்பாக மாறியது.
பிரதமர் உத்தரவு
இந்த ஆய்வகம், தொழில்நுட்ப ரீதியாக பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ளது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிப்ரவரி 1ம் தேதி கோவிட் -19க்கான தடுப்பூசியை உருவாக்க நாட்டின் வளங்களை ஒதுக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
பல நிறுவனங்கள்
COVID-19க்கான தடுப்பூசியை உருவாக்கும் பந்தயத்தில் உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சி குழுக்கள் ஈடுபட்டுள்ளன. விலங்குகள் உடலில் அவற்றை பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் மனிதர்களுக்குத்தான், அது இன்னும் முழுமையாக குணப்படுத்துவதாக உறுதிச் செய்யப்படாமல் உள்ளது. ஜனவரி மாதமே, சீனா இந்த வைரஸின் மரபணு வரிசையை வெளியிட்டது, இதனால் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாதிரிகள் பெறத் தேவையில்லாமல் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க முயற்சிக்க முடியும். பல தனியார் நிறுவனங்களும் வெற்றிகரமாக மருந்துகளை உருவாக்கியதாகக் கூறியுள்ளன. ஆனால் இன்னும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இஸ்ரேலின் இந்த ஆய்வு வெற்றிகரமாக மாற வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு.