இஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு?
ஜெருசலேம்: இஸ்ரேலில் மீண்டும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வலதுசாரி கட்சித் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு 2009 முதல் பிரதமராக இருந்து வருகிறார். அவரது ஆட்சிக் காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பெரும்பான்மைக்கான இடங்களை நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெறவில்லை. இருப்பினும் சிறிய கட்சிகளுடன் நெதன்யாகு ஆட்சியைத் தக்க வைத்தார். சில மாதங்களிலேயே கூட்டணி கட்சி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.
இதனால் இஸ்ரேல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இத்தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நெதன்யாகுவின் லிகுட் கட்சியானது ப்ளூ அண்ட் வைட் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.
ஆனால் ப்ளூ அண்ட் வைட் கட்சி கட்சி தங்களது தலைமையில்தான் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிறது. இதனால் இஸ்ரேல் அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.