ஐநா பள்ளிக்கூடத்தையும் விட்டு வைக்கவில்லை இஸ்ரேல் –குண்டு வீசித் தகர்த்த கொடுமை!
காஸா: காஸாவில் ஐ.நா சார்பி்ல நடத்தப்படும் பள்ளிக் கூடம் ஒன்றை இஸ்ரேலியப் படைகள் சல்லடையாகத் துளைத்து எடுத்து விட்டன. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் காஸா முனையில் 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் நேற்று நடந்த தாக்குதல்தான் இதுவரை நடந்த தாக்குதிலேயே அதிக உக்கிரமானதாக கருதப்படுகிறது. "ஆபரேஷன் புரொடெக்டிவ் எட்ஜ்" என்ற பெயரில் ஜூலை 8 ஆம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் காஸாவில் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
நேற்றைய தாக்குதலில் மட்டும் காஸாவில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் 475 வீடுகள் முற்றிலும் தகர்ந்து போய் விட்டன. 2644 வீடுகள் பெருமளவிலான சேதத்தை சந்தித்துள்ளன. 46 பள்ளிகள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 32 ராணுவ வீரர்கள், 2 பொதுமக்கள், ஒரு தாய்லாந்து நாட்டு ஊழியர் ஆகியோர் பலியாகியுள்ளனர். ஒரு வீரரைக் காணவில்லை. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே, காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாது என்று ஹமாஸ் தலைவர் கலீத் மெஷால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "நாங்கள் மக்களை கேடயமாக வைத்துப் போரிடவில்லை.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பையும், அத்துமீறலையும் குறி வைத்துத்தான் போரிட்டு வருகிறோம். மக்கள் எங்களுக்காக செய்துள்ள தியாகங்களை நாங்கள் குறைத்து எடுத்துக் கொள்ள முடியாது. போர் நிறுத்தம் செய்தால் இஸ்ரேல் எங்கள் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.