இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் சரமாரி ராக்கெட் தாக்குதல்
காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் நேற்று மதியம் இஸ்ரேல் விமானப்படையினரைக் குறி வைத்து சரமாரியான ராக்கெட் தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது அமைப்பை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் விமானப்படை இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. இந்த தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் திணறியது. கிட்டதட்ட 40 ராக்கெட்களை வீசி இத்தாக்குதலை நடத்தி உள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.
கடந்த வாரம் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேர் கொல்லப்பட்டதற்காக பழி வாங்குவதற்காக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது கிட்டதட்ட 240 ராக்கெட்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
குறுகிய காலத்தில் தங்கள் மீது பல டஜன் ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. அங்குள்ள நெட்வியாட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று ஏவுகணைகள் தாக்காமல் தடுக்கப்பட்டன.
ஆனால் பீர்ஷேவா நகரில் மேலும் 16 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹமாஸ் ராணுவப் பிரிவைச் சேர்ந்த இஸ் அட்டின் அல்கோசம், இஸ்ரேல் 6 பேரைக் கொன்றதற்கு கண்டிப்பாக விலை கொடுத்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஹமாஸ் இயக்கம்தான் நடத்தியது என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.