காஸாவில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவிப்பு!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து தமது படைகளைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் சுமார் 1800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே அவ்வப்போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுவதும் அது மீறப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்துவதற்கு சற்று முன்னதாக காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படை விலகுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காஸாவில் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்திய சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்நிலையில் யுத்த நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, மத்திய இஸ்ரேலின் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதால், ஜெருசலத்திலும் டெல் அவிவிலும் வான் தாக்குதல் எச்சரிக்கைக்கான அபாய சங்குகளின் சப்தம் எதிரொலித்தது.
போர் நிறுத்தம் துவங்குவதற்கு முன்பாக, இஸ்ரேலிய விமானப் படையும் குறைந்தது ஐந்து முறையாவது காஸா மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.