இஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது
Recommended Video
ஜெருசலேம்: காஸா முனையின் ஷாஜயா பகுதி அது. திங்கள்கிழமை நள்ளிரவில், திடீரென வானில் இருந்து, மின்னல் போல பாய்ந்து வந்தது ஒரு ஏவுகணை.
அது, சரியாக இலக்கு வைக்கப்பட்டது போல, அங்கேயிருந்த ஒரு, வீட்டின் மூன்றாவது தளத்தில் சென்று விழுந்தது. அவ்வளவுதான்.. பெரும் தீ மூட்டத்தோடு, அங்கே குண்டுகள் வெடித்து சிதறுகின்றன. அதன் சத்தம் பல கி.மீ தாண்டியும் கேட்டதால், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள், பதறியடித்து எழுந்தனர்.
பலரும் வீட்டை திறந்து வந்து வெளியே எட்டிப் பார்த்தனர். அங்கே ஒரு வீடு தரைமட்டமாகி, அங்கேயிருந்து தீப்பிழம்புகள் வெளியே வந்ததை பார்த்து திகைத்து நின்றனர்.
அது, இஸ்லாமிக் ஜிகாத் என்ற ஆயுத குழு அமைப்பின் மூத்த தளபதி பஹா அபு அல் அட்டா, வீடு என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.
கொல்லப்பட்ட இனக்குழு தளபதி
இப்படித்தான், காஸாவின் பெரும்பாலானோர் பொழுது, நேற்று விடிந்தது. சற்று நேரத்திலேயே, அபு அல் அட்டா அந்த வீட்டுக்குள் கொல்லப்பட்டதும், இஸ்ரேல் விமானப்படையின் ஏவுகணை தாக்குதலால்தான் இது நடந்தது என்ற தகவலும், உலகம் முழுக்க வெளியாகிறது. அபு அல் அட்டா மட்டுமல்ல, அவரது மனைவி அஸ்மா அபு அல்-அடாவும், இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவான குட்ஸ் படை பிரிவை சேர்ந்த நான்கு பேரும் இந்த தாக்குதலில், கொல்லப்பட்டனர்.
மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!
ராக்கெட்டுகள்
மற்றொரு பக்கம், சிரியாவின் டமாஸ்கஸில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில், இஸ்லாமிய ஜிஹாத் தலைவரான அக்ரம் அல்-அஜூரியின் மகன், உட்பட குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அபு அல் அட்டா சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அதே கணத்தில், காஸாஸ முனையிலிருந்து இஸ்ரேலை நோக்கி அடுக்கடுக்காக சீறி பாய்ந்தன ராக்கெட்டுகள்.
தாக்குப்பிடிக்க முடியவில்லை
இஸ்ரேலின் அதிநவீன தற்காப்பு வான்வெளி ஏற்பாடுகளையும் மீறி ராக்கெட்டுகள் இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில் சென்று விழுந்தன என்றால் ஏவியவர்கள் ஆவேசம் எத்தகையது என்பதை இஸ்ரேலும் புரிந்து கொண்டது. இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் கலீத் அல்-பாட்ஷ் செவ்வாய்க்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "அதிக விலை கொடுக்கப் போகிறார்" என்று ஆவேசமாக எச்சரித்தார்.
ஆபத்து அதிகம்
காஸாவின் கடலோரப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸுக்குப் பிறகு அந்த பகுதியின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத குழு இஸ்லாமிக் ஜிகாத்தான். ஆனால் இந்த இரண்டு முக்கிய இனக் குழுக்களுமே ஈரானுடன் நெருக்கமானவை. இருவருக்கும் பொது எதிரி இஸ்ரேல்தான். இப்போது ஹமாசும், இஸ்லாமிக் ஹிகாத்தும் இணைந்து, இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலை தொடங்கினால், அதன் ஆபத்து அதிகமாகும். இதை மேலை நாடுகள் உணராமல் இல்லை.
எகிப்து
இந்த பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் மட்டுமின்றி, இஸ்ரேலுமே இப்போது மலைபோல நம்பிக்கொண்டிருக்கும் ஒரு நாடு எகிப்து. இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் இதுபற்றி வெளியிட்ட அறிவிப்பில், பதற்றத்தை தணிக்க, எகிப்திய பேச்சுவார்த்தை குழுவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைகளை பற்றி விரிவாகக் கூறவில்லை.
எகிப்து முயற்சியால் சமாதானம் ஆகுமா
எகிப்து பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் காஸா பிரிவுகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. இப்படி பேச்சுவார்த்தை நடத்திதான், கடந்த மே மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலால் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இப்போதும் எகிப்து நினைத்தால்தான், இந்த பதற்றத்தை தணிக்க முடியும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளி பிரிவுகளுக்கும் இடையிலான பதட்டங்களை குறைக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்று, எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.