காஸாவுக்குள் கடற்படை கமாண்டோக்களை அனுப்பிய இஸ்ரேல்..!
ஜெருசலேம்: வான் மூலமாக அட்டூழியத்தனமான தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டு வந்த இஸ்ரேல் தற்போது தனது கமாண்டோப் படையினரை தரை மார்க்கமாக காஸா முனைப் பகுதிக்குள் ஊடுறுவ வைத்துள்ளது.
இவர்கள் இஸ்ரேல் கடற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் ஆவர். காஸாவின் வடக்குப் பகுதி வழியாக இவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வான் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது முதல் முறையாக தரை மார்க்கமாக காஸாவுக்குள் ஊடுறுவியுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் உள்ள ராக்கெட் லாஞ்சர் தளத்தை நோக்கி இந்த கமாண்டோக்கள் சென்றதாகவும். பின்னர் சோதனைக்குப் பின்னர் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ரேடியோ தெரிவித்துள்ளது.
உள்ளே நுழைந்தபோது பாலஸ்தீனப் போராளிகளுக்கும், கமாண்டோக்களுக்கும் இடையே சிறிய அளவிலான துப்பாக்கிச் சண்டையும் நடந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த சண்டையின்போது இஸ்ரேல் படையைச் சேர்ந்த நான்கு பேர் லேசான காயத்தைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.