இஸ்ரேல் விமானங்கள் சரமாரி தாக்குதல்...... காஸா பகுதியில் போர் பதற்றம்
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் சுயாட்சி பகுதியான காஸாமுனை பகுதியை 2007-ம் ஆண்டு முதல் ஹமாஸ் போராளிகள் குழு நிர்வகித்து வருகிறது. இந்த ஹமாஸ் போராளிகள் குழு இஸ்ரேலின் தென் பகுதி மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ராக்கெட், அங்குள்ள நகரம் ஒன்றில் விழுந்து ஒரு பேருந்து சேதமானது. ஆனால் யாருக்கும் காயம் இல்லை.
மற்றொரு ராக்கெட் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹமாஸ் போராளிகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரம் கொண்ட இஸ்ரேல், காஸாமுனை மீது இன்று தனது போர் விமானங்களை கொண்டு வான்தாக்குதல்கள் நடத்தியது.
ஹமாஸ் போராளிகள் இயக்கத்தினரின் 2 பயிற்சி முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களின் சேத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அந்த பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகி உள்ளது.