அடங்காத இஸ்ரேலின் அட்டூழியம்! தொடரும் தாக்குலில் 18 பாலஸ்தீனர்கள் பலி!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் அங்கு இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாக தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. இதனைத் தொடர்ந்து எகிப்தின் முன் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கத்தினரிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் தொடர்ந்து மீறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இஸ்ரேல் நேற்றும் யுத்த நிறுத்தத்தை மீறி நடத்திய கொடூர தாக்குதலில் 18 அப்பாவி பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 120 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் காஸா பகுதியில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.