காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்துள்ள இஸ்ரேலிய நிறுவனம்
ஜெருசலம்: உலகின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ள நிலையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் புதிய எந்திரத்தை இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த வாட்டர்-ஜென் என்ற நிறுவனம் காற்றில் இருந்து குடிநீரைத் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த எந்திரம் மூலம் வெறும் ரூ.1.5ல் ஒரு லிட்டர் தண்ணீரை தயாரிக்க முடியும். ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.15க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றை ஜீனியஸ் அட்மாஸ்பியர் வாட்டர் ஜெனரேஷன் யூனிட் என்ற அந்த எந்திரத்திற்குள் செலுத்தினால் அதில் இருக்கும் ஹீட் எக்சேஞ்சர் காற்றை குளிர்ச்சியாக்கி நீரை பிரித்தெடுக்கும். அவ்வாறு பிரிக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் இணை சிஇஓ ஆர்யே கோஹ்வி தெரிவித்துள்ளார்.
இந்த கருவியை வீட்டிலேயே பொருத்தி குடிநீர் தயாரிக்கலாம். அது இந்தியாவில் உள்ள மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று ஆர்யே மேலும் தெரிவித்துள்ளார்.