விடிய விடிய சிரியாவை வெளுத்து வாங்கிய இஸ்ரேல் ராணுவம்.. ஈரானுக்கு எதிராக ஆவேசம்
டமாஸ்கஸ்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் திங்கள் கிழமை விடிய விடிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சிரியாவில் பதட்டம் நிலவி வருகிறது.
ஈரான், இஸ்ரேலுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு உலக நாடுகள் இடையே கவலையை அளித்துள்ளது. .
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், டமாஸ்கஸ் மற்றும் அதன் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதல், ஈரானுக்குத் தொடர்புடைய உளவுத்துறை தளங்கள், பயிற்சி முகாம் மற்றும் பல முக்கிய தளங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்றதாக தெரிகிறது.
ஏவுகணைகள் மூலம் சிரியாவுக்குள் ஊடுறுவி ஈரானிய நிலைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கித் தகர்த்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் நால்வர் சிரிய வீரர்கள் என்று தெரிகிறது. இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளை 7 முறை சிரிய ராணுவத்தின் ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.