யுத்த நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் வெறியாட்டம்: ஒரே நாளில் 160 பேர் பலி!
காஸா: யுத்த நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
காஸா பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் கண்மூடித்தனமாக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 1,500 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், பிஞ்சு குழந்தைகள்.
2 லட்சம் அகதிகள்
சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் அந்த பள்ளிகள் மீதும் ஈவிரக்கமின்றி தாக்குதலை நடத்தி வருகிறது.
3 நாள் யுத்த நிறுத்தம்
இந்த தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்திய பின்னரும் இஸ்ரேல் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 3 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே நாளில் 160 பேர் பலி
ஆனால் யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வெறியாட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 160 பாலஸ்தீனர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.
ரஃபா, கான் யூனிஸ் மீது தாக்குதல்
காஸாவின் ரஃபா பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள், கான் யூனிஸ் பகுதி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 51 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இதனால் இஸ்ரேல் வீரர்களின் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்கள்
மேலும் ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐநா மற்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.