இஸ்ரேல் நோக்கி வந்த 12 ஏவுகணைகள்.. பதிலுக்கு போர் ஜெட்களை அனுப்பிய நெதன்யாகு.. பற்றி எரியும் காஸா
ஜெருசலேம்: இஸ்ரேலுக்கு அருகே ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வெளி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக கூறி, இஸ்ரேல் இந்த பதில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
Recommended Video
இஸ்ரேல் அருகே பாலஸ்தீன மக்கள் வசிக்கும் காஸா பகுதி மீண்டும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கி உள்ளது. இந்த காஸா பகுதியை புரட்சி குழுவான ஹமாஸ் கட்சி 2005ல் கைப்பற்றியது. சில உலக நாடுகள் ஹமாஸ் கட்சியை தீவிரவாத அமைப்பு என்றும், சிலர் அரசியல் கட்சி என்றும், சிலர் புரட்சி குழு என்றும் அழைத்து வருகிறார்கள்.
மொத்தமாக பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும். வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மீண்டும் பாலஸ்தீன மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என்று ஹமாஸ் குழு தீவிரமாக போராடி வருகிறது.
ஆயுத போராட்டம்
இதற்காக ஹமாஸ் குழு ஆயுத தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இதை தடுக்கும் வகையில் காஸா பகுதியின் அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் மூடி உள்ளது. இஸ்ரேலை தாண்டிதான் காஸா செல்ல வேண்டும் என்பதால் மொத்தமாக காஸாவை மூடி உள்ளது இஸ்ரேல். இதனால் காஸா மக்கள் வெறும் 3 மணி நேர மின்சாரம், போதிய உணவு இல்லாமல், தண்ணீர் கூட இல்லாமல் மிக மோசமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
என்ன தாக்குதல்
மொத்தமாக ஹமாஸ் குழு தங்கள் புரட்சியை கைவிடும் வரை, அவர்களை சுதந்திரமாக இருக்க அனுமதிக்க மாட்டோம், என்று இஸ்ரேல் அறிவித்துவிட்டது. இதை எதிர்த்து ஹமாஸ் குழுக்கள் போராடி வருகிறது. இந்த போராட்டம் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஈரான்- சவுதி மோதலாக பார்க்கப்படுகிறது. சன்னி - ஷியா போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
பலூன் போராட்டம்
இந்த நிலையில் தற்போது பலூன் போராட்டங்களை ஹமாஸ் கையில் எடுத்துள்ளது. இன்சென்ட்ரி பலூன்களை ஹமாஸ் படை குழு ஏவி வருகிறது. இன்சென்ட்ரி பலூன் என்பது உள்ளே எரிபொருள் அல்லது சிறிய வகை குண்டுகள் இருக்கும் பலூன்கள் ஆகும். இந்த பலூன்களை இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் பறக்க விடும். இஸ்ரேலில் இந்த பலூன்கள் வெடிக்கும் போது, கீழ வெடிகுண்டு விழுந்து சேதத்தை ஏற்படுத்தும்.
தீ விபத்து
இதில் சமயங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு தாக்குதல் நடத்தப்படும். அதாவது இந்த பலூனில் எரிபொருள் நிரப்பி, அதை இஸ்ரேல் நோக்கி அனுப்புவார்கள். இந்த பலூனின் கீழ் பகுதியில் சிறிய நெருப்பு இருக்கும். சரியாக வயல் பகுதிகளுக்கு மேலே செல்லும் போது, இந்த பலூன்கள் வெடித்து, கீழே நிலத்தில் விழுந்து அங்கு தீ விபத்துகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 800க்கும் அதிகமான இஸ்ரேல் பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
அடுத்தடுத்த தாக்குதல்
இந்த நிலையில் ஹமாஸின் இந்த தாக்குதலை தடுக்கும் வகையில் ஹமாஸ் குழு இருக்கும் பகுதியில் இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தியது. விமானம் மூலம் குண்டுகளை, சிறிய ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படை, 12 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. நேற்று இரவு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டது. இதில் 3 ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
நிலைமை மோசம்
மீதமுள்ள 9 ஏவுகணைகள் இடையில் மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் மீண்டும் காஸாவில் விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏவுகணை தாக்குதலையும், விமான வான்வெளி தாக்குதலைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் காஸா பகுதியே தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.
பலி எண்ணிக்கை
இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்த விவரம் இன்னும் முழுதாக வெளியாகவில்லை. இந்த மோதல் முழுமையான போராக மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது தொடர்பாக இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களை இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இஸ்ரேல் - அமீரகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே வாரத்தில் இப்படி மோதல் நடப்பது இஸ்லாமிய நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.