நிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ்தான் இருக்கு.. கண்டுபிடித்த இஸ்ரோ.. ஒப்புக்கொண்ட நாசா!
நிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
நியூயார்க்: நிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மனிதனுக்கு இன்னும் நிலவு மேல் இருக்கும் பிரமிப்பு போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாடல் எழுதி, கவிதை எழுதி, கதை எழுதி, கொடி நட்டு, கால் பதித்தும் கூட நிலவு மேல் இருக்கும் ஆசை மனிதனுக்கு குறையவேயில்லை.
இந்த நிலையில்தான் நிலவில் மொத்தமாக குடியேற வசதியாக ஒரு கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நிலவில் பல டன் கணக்கில் ஐஸ்கட்டி குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோதான் நாசாவிற்கு இதை கண்டுபிடிக்க உதவியது.
ஐஸ் கட்டி
தற்போது நாசா விஞ்ஞானிகள், நிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகள் நிறைந்து இருந்ததை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது நிலவின் மேற்புறத்தில் இருந்து சில சென்டிமீட்டர் தூரம் ஆழம் வரை ஐஸ் கட்டிகள் நிரம்பி உள்ளது. நாசாவின் எம்3 எனப்படும் ''மூன் மினராலஜி மேப்பர்'' என்ற சாதனம் மூலம் இந்த தகவல் அறியப்பட்டுள்ளது.
நிலவின் சூரியன் படாத பக்கம்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நிலவின் பின்பக்கத்தில் அதிக அளவில் ஐஸ் கட்டிகள் உள்ளது. அதேபோல் சூரிய ஒளி பல ஆயிரம் வருடமாக படாமல் இருக்கும் நிலவின் இன்னொரு பக்கத்தில்தான் அதிக அளவில் ஐஸ் கட்டிகள் உள்ளது. மைனஸ் 156 டிகிரி செல்சியஸ் அந்த பகுதியில் நிலவுகிறது, இதனால்தான் அங்கே ஐஸ் படலம் உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது.
வாழ வழி உள்ளது
இது விஞ்ஞானிகளுக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதாவது, இதன் மூலம் நிலாவில் எதிர்காலத்தில் வசிக்க முடியும். தற்போது, நிலவில் வெப்பநிலை உயர வாய்ப்பில்லை. ஆனால் எதிர்காலத்தில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நிலவின் வெப்பநிலையை உயர்த்தி, அங்கு இருக்கும் ஐஸ் கட்டிகளை உருக வைக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் நிலவில் வசிப்பது சாத்தியம் ஆகும்.
சந்திராயன் உதவி
நிலவில் முதலில் நீர் இருக்கிறது என்பதை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோதான் கண்டுபிடித்தது. தற்போது, நிலவில், ஐஸ்கட்டி இருக்கிறது என்பதையும் இஸ்ரோதான் கண்டுபிடித்துள்ளது. ஆம், இது நாசாவின் கண்டுபிடிப்பு கிடையாது. இஸ்ரோ பத்து ஆண்டுகளுக்கு முன் அனுப்பி செயலிழந்த சந்திராயன் 1 அனுப்பிய தகவல்களை வைத்துதான் இதை கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.