மங்கள்யான் திட்டத்துக்கு அமெரிக்காவின் சிறந்த விண்வெளி முன்னோடி விருது
வாஷிங்டன்: மங்கள்யான் திட்டத்துக்கு அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சமூகத்தின் (என்எஸ்எஸ்) சார்பில் சிறந்த விண்வெளி முன்னோடி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிப்படமான கிராவிட்டி ஹாலிவுட் படத் தயாரிப்புக்கு ஆனதை விட குறைந்த செலவில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்டது மங்கள்யான் விண்கலம். இது சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 5, 2013-இல் மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏறத்தாழ 300 நாள்கள் பயணத்துக்குப் பிறகு 2014, செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.
செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்து 100 நாள்களுக்கு மேல் ஆகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான பல்வேறு தகவல்களை மங்கள்யான் பூமிக்கு அனுப்பி வருகிறது. இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என இஸ்ரோவின் அறிவியல், தொலையுணர்வுச் செயற்கைக்கோள்களின் தலைமைத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறந்த விண்வெளி பொறியியல், தொழில்நுட்பத்துக்கான 2015-ஆம் ஆண்டின் விண்வெளி முன்னோடி விருது மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான மங்கள்யான் திட்டக் குழுவுக்கு வழங்கப்பட உள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் மே மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை கனடாவின் டொரன்டோ நகரில் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மங்கள்யான் திட்ட குழுவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுவரை எந்த நாடும் சாதிக்காத வகையில் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்ததற்காகவும், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் விண்கலங்களில் அதன் முழு உருவத்தையும் மொத்தமாகப் படம் பிடிக்கும் வகையில் விண்கலம் சுற்றிவருவதாலும், இந்த விருது வழங்கப்படுவதாக தேசிய விண்வெளி சமூகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்களில் சில படங்களே முழுமையாக எடுத்து அனுப்பப்பட்டுள்ளன. எனவே, மங்கள்யான் விண்கலம் எடுத்தனுப்பும் படங்கள், கோள்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சந்திரயான்-1 திட்டத்துக்கு இதே விருது வழங்கப்பட்டது. இப்போது, 2014-ஆம் ஆண்டில் மங்கள்யான் திட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.