எல்லையில் இந்தியாதான் படைகளை குவித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது: சீனா பகீர் குற்றச்சாட்டு!
எல்லையில் இந்தியா தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெய்ஜிங்: எல்லையில் இந்தியா தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்தியா சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சீனா அந்நாட்டு ராணுவ வீரர்களையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனப் படைகளைத் திரும்ப பெற அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. ஆனால் இந்தியா தனது படைகளைத் திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவால் தான் பதற்றம்
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எல்லையில் இந்தியா தான் பதற்றத்தைத் தூண்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியா ஆக்கிரமிப்பு
இந்தியா எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற்றாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறிய அவர், இந்தியாதான் சீனாவுக்குள் ஊடுருவியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுவே முதல்முறை
டோக்லாம் பிரச்சனை குறித்து சீன அமைச்சர் ஒருவர் இதுபோன்று கூறுவது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிச்சயம் டோக்லாம் பிரச்சனை குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.