துருக்கி விமான நிலைய தாக்குதல்: பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு; 238 பேர் காயம்
இஸ்தான்புல்: துருக்கி இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய மூன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டன. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 36 பேர் பலியானதாகவும், 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 239 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாவும் நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள். சவூதி அரேபியாவைச் சேர்ந்த 5 பேரும், ஈராக்கைச் சேர்ந்த 2 பேரும், துனிசியா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஈரான், உக்ரைன் மற்றும் ஜோர்டானைச் சேர்ந்த தலா ஒருவரும் பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தற்கொலைத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் பினலி இல்டிரிம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.