இஸ்தான்புல் தாக்குதல் : மோடி, ராகுல் கண்டனம் - உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலைய தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய மூன்று தற்கொலைத் தாக்குதலில் சுமார் 36 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கட்டுள்ள நிலையில், இந்த தற்கொலைத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் பினலி இல்டிரிம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்தான்புல் நகருக்கான அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் விமானங்கள் ஆங்காரா நகர் உள்ளிட்டவற்றிற்கு மாற்றி விடப்பட்டு வருகிறது.
இந்தியர்களுக்கு பாதிப்பில்லை
உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கியிலுள்ள இந்திய தூதரகத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
துருக்கியிலுள்ள இந்தியர்களுக்கு ஏதேனும் உதவிகால் தேவைப்பட்டால் அந்நாட்டு தலைநகர் ஆங்காராவில் உள்ள இந்திய தூதரக்கத்தை, 05303142203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பாட்டுள்ளது.
|
மோடி கண்டனம்
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மனிதாபிமானமற்ற, கொடூரமான தாக்குதல் என்றார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றார்.
|
ராகுல்காந்தி கண்டனம்
இஸ்தான்புல் தாக்குதல் செய்தி கேட்டு அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.