ஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: சிரிய மக்களை எச்சரித்த ஐஎஸ்
கெய்ரோ: ஐரோப்பாவுக்கு அகதிகளாக தப்பியோடுவது பெரிய பாவம் என சிரிய மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அவர்கள் கடல் மார்க்கமாக செல்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தனது பத்திரிக்கையான தபிக்கின் செப்டம்பர் மாத பிரதியில் சிரியாவில் இருந்து அகதிகளாக ஐரோப்பாவுக்கு செல்பவர்கள் பற்றி தெரிவித்துள்ளது.
தங்கள் உயிரை பணயம் வைத்து இஸ்லாத்தின் நாட்டில் இருந்து துரோகிகளின் நாடுகளுக்கு சிரிய மக்கள் செல்வதாக அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாத்திகம் மற்றும் அநாகரீகம் ஆளும் சிலுவையின் நாடான ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வது பெரும் பாவம் என்று தீவிரவாதிகள் சிரிய மக்களை எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் நாடுகளை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.