தாய்லாந்துக்குப் போனா... மறக்காம.. "குரங்குத் திருவிழா"வைப் பாருங்கன்னு சொல்ல வந்தோம்!
பாங்காக்: தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் குரங்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தாய்லாந்தின் லொப்புரி மாகாணத்தில் ஆண்டுதோறும் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. 'தோ சின் லிங்' என்று அழைக்கப்படும் குரங்குகளுக்கு உணவு அளிப்பதே இந்தப் பண்டிகையின் முக்கிய நோக்கம்.
குரங்குகளுக்கு உணவு வழங்குவதால் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என அங்குள்ள சமூகத்தினர் நம்புகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள்...
ஆண்டுதோறும் இந்த திருவிழாவைக் காண்பதற்காகவே தாய்லாந்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்தத் திருவிழா நாளன்று அங்கு குரங்குகளுக்கு சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான குரங்குகள்...
வழக்கம் போல இந்தாண்டும் ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு, விருப்பம் போல உணவு உண்டு மகிழ்ந்தன.
விதவிதமான உணவுகள்...
குரங்குகளுக்கென பிரத்யேகமாக பழ வகைகள், காய்கறிகள் கலந்த சாலட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டன. அவற்றை குரங்குகள் ருசித்துச் சாப்பிடுவதை சுற்றி நின்று மக்கள் ரசித்துப் பார்த்தனர்.
குரங்கு சேட்டை...
என்னதான் குரங்குகளுக்கு என தனியாக உணவுகள் பரிமாறப் பட்டாலும், அவை தனக்கான தனிப்பட்ட குணத்தைக் காட்டத் தவறுவதில்லை. இந்தத் திருவிழாவைக் காண வரும் மக்களைக் கடிப்பது, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறித்துச் செல்வது போன்ற சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம்.