சியர்ரா லியோனில் இத்தாலிய டாக்டரை தாக்கிய எபோலா: வைரஸால் தாக்கப்பட்ட முதல் இத்தாலியர்
ரோம்: சியர்ரா லியோனில் பணிபுரியும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது. எபோலா வைரஸால் தாக்கப்பட்ட முதல் இத்தாலியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியர்ரா லியோனில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் கடலோர நகரமான லாக்காவில் இருக்கும் சுகாதார மையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது. எபோலாவால் தாக்கப்பட்ட முதல் இத்தாலியர் அந்த மருத்துவர் தான். அவரது பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இது குறித்து இத்தாலிய சுகாதாரத் துறை அமைச்சர் பீட்ரிஸ் லோரன்சின் கூறுகையில்,
எபோலா தாக்கிய மருத்துவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு ரோமில் உள்ள ஸ்பாலன்சி மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
என்ன தான் சுகாதார மையத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியர்ரா லியோனில் தினமும் 100 பேர் எபோலா வைரஸால் தாக்கப்படுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவுக்கு இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.