ஒரே "சம்பவம்" ஒட்டுமொத்த பிளான் கிளோஸ்! வங்கி கொள்ளைக்கு தோண்டிய சுரங்கம்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்
ரோம்: இத்தாலி நாட்டில் வங்கியை பிளான் போட்டு திருட சென்ற நபர் செய்த காரியம் சொதப்பலில் முடிந்துள்ளது.
வங்கியைக் கொள்ளை அடிப்பது போன்ற படங்களுக்கு ஹாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஆண்டுக்கு சில படங்களாவது இந்த கான்சேப்டில் வந்துவிடும்.
இதைப் பார்த்து ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், சில ஆர்வக் கோளாறுகள் அதே பாணியில் வங்கிகளைக் கொள்ளையடிக்கும் காமெடி நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கும்.
இத்தாலி
அப்படியொரு சம்பவம் தான் இத்தாலியில் நடந்துள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருக்கும் வங்கி ஒன்றை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளை அடிக்க பிளான் போட்டுள்ளது. இதற்காகப் படங்களில் வருவதைப் போலவே பக்காவாக அந்த கும்பல் பிளான் போட்டுள்ளது.
சுரங்கப் பாதை
யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லாமல் வங்கி உள்ளே புகுந்து கொள்ளை அடிக்க திட்டம் போட்ட, அந்த கும்பல் இதற்காக ரகசிய சுரங்கப் பாதையைத் தோண்டி உள்ளனர். வங்கிக்கு அருகே வரை அவர்கள் சுரங்கப் பாதையைத் தோண்டிவிட்டனர். இருப்பினும், அப்போது எதிர்பாராத விதமாகச் சுரங்கப் பாதை திடீரென சரிந்துள்ளது. இதனால் திருட சென்ற கொள்ளையர்கள் அடியே சிக்கிக் கொண்டனர்,
ட்விஸ்ட்
இருப்பினும், அவர்களில் ஒருவர் எப்படியோ வெளியே வந்துவிட்டார். பதறிய அந்த நபர், நடந்த சம்பவத்தைக் கூறி உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இரு நபர்கள் சுரங்கத்திற்கு அருகே இருந்தால் அவர்களை போலீசார் எளிதாக மீட்டுவிட்டனர். ஆனால், சுரங்கத்தைத் தோண்டிக் கொண்டிருந்த நபர் உள்ளே நன்றாக மாட்டிக் கொண்டார்.
மீட்டனர்
இதையடுத்து பக்கவாட்டில் மற்றொரு சுரங்கத்தைத் தோண்டி அவரை காப்பாற்ற போலீசார் முடிவு செய்தனர். இருப்பினும், அவர்கள் தோண்டிய சுரங்கம் சாலையில் இருந்து ஆறு அடி ஆழத்தில் இருந்ததால் அதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், அந்த நபரை போலீசார் வெற்றிகரமாக மீட்டனர். அப்போது அவர் பயங்கரமாகப் பயந்து இருந்தார்.
கெஞ்சிய கொள்ளையன்
மேலும், பக்கவாட்டில் போலீசார் சுரங்கத்தைத் தோண்டும் போது, அந்த நபர் எப்படியாவது தன்னை காப்பாற்றும்படி கெஞ்சி உள்ளார். மீட்புப் பணிகள் சில மணி நேரம் வரை ஆனதால் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் லிக்விட் உணவு வழங்கப்பட்டது. எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவர் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபருக்கு மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
பிளான் என்ன
இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மூடி இருந்த கடை ஒன்றில் இருந்த சுரங்கம் தோண்டி தொடங்கிய அவர்கள், தினமும் கொஞ்ச தூரம் என்று வங்கி வரை தோண்டத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அதற்குள் சுரங்கம் சரிந்து விழவே அத்தனை பேரும் மாட்டிக் கொண்டனர்.