இத்தாலி டாக்டர் இப்படிச் சொல்றாரே.. நம்பலாமா.. நம்பி நிம்மதி அடையலாமா?
மிலன்: கொரோனா வைரஸ் தானாக இறந்துவிடும் என்று இத்தாலியைச் சேர்ந்த பேராசிரியர் மாட்டியோ பஸ்செட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக மக்களை தினமும் மரண பீதியில் வைத்துக் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
உலக அளவில் 90,46,215 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 4,70,939 பேர் உயிரிழந்துள்ளனர். 48,47,018 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 4,26,910 பேர் பாதிக்கப்பட்டு, 13,703 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆகவும், சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆகவும் உள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 1 லட்சத்தை தொடுவதற்கு 64 நாட்கள் பிடித்தது. 2 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடுவதற்கு 15 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் பத்தே நாட்களில் 3 லட்சத்தை தொட்டது. தற்போது 8 நாட்களில் கூடுதலாக ஒரு லட்சம் பாதிப்பை எட்டி, நான்கு லட்சத்தை கடந்துள்ளது.
துவக்கத்தில் 'முரட்டு புலி'யாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது காட்டுப் பூனையாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் தன்னைத் தானே மரபணு பிறழ்வு செய்து கொண்டு வருகிறது. துவக்கத்தில் வீரியத்துடன் இருந்த வைரஸ் தற்போது வீரியம் குறைந்துள்ளது. இந்த வைரஸ் வீரியம் இழக்கிறது என்பது உண்மையாகும் பட்சத்தில், கொரோனா வைரஸ் தானாக வலுவிழந்து உயிரிழக்கும்'' என்று இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும், பேராசிரியருமான மாட்டியோ பஸ்செட்டி தெரிவித்துள்ளார்.
தாராவியில் குறைந்த வைரஸ் தொற்று.. வெற்றி ரகசியம் இதுதான்!
மேலும் இந்த வைரஸ் குறித்து அவர் தெரிவித்து இருக்கும் கருத்தில், ''கொரோனா வைரஸ் தனக்குத் தானே மரபணு பிறழ்வு செய்து கொள்கிறது. இவ்வாறு மரபணு பிறழ்வு ஏற்படும்பட்சத்தில், அதனால் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது. மேலும், இந்த வைரஸுக்கு எதிரான மருத்துவத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருந்து கிடைக்க துவங்கி இருப்பதாலும், மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதாலும், தொற்று பரவுவது குறைந்து வருகிறது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த வைரஸின் வீரியம் இத்தாலியில் அதிகமாக இருந்தது. அங்கு அப்போது 80, 90 வயதுகளில் இருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால், தற்போது அந்த வயதில் இருப்பவர்கள் எந்த மருத்துவ உதவியும் இன்றி சுவாசித்து வருகின்றனர். இன்று சுவாசிப்பவர்கள் கடந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு கூட சுவாசிக்க முடியாத சூழலில் இருந்தனர். தற்போது வைரஸ் வீரியம் குறைந்து இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இவரது கூற்றைப் போன்றே முன்பும் மருத்துவ ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தன்னைத் தானே மரபணு பிறழ்வு செய்து கொள்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வைரஸ் மரபணு பிறழ்வுகளும் சிறிய கால கட்டத்தில், பல்வேறு வீரியங்களுடன் நடக்கும். நிரந்தர மாற்றமாக இருக்காது. இந்த நிலையில் புதிதாக பிறக்கும் வைரஸ்கள் இந்த வைரஸ்களை அகற்றி விடும். மற்ற உயிரினங்களைப் போலவே வைரஸ்களும் மரபணு பிறழ்வுகளுக்கு உட்பட்டது என்று ஆய்வாளர்கள் சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் துவக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இல்லை. இறப்புகளும் குறைந்து இருக்கிறது. இந்த விஷயத்தில் இத்தாலியுடன் மற்ற நாடுகளை ஒப்பிட முடியாது. தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக வீரியத்துடன் இருந்த கொரோனா வைரஸ் பின்னர்தான் அங்கு வீரியம் குறைந்தது. அதேபோல், மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தன்னை மரபணு பிறழ்வு செய்து கொள்ளும்போது, பாதிப்பு குறையலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.