நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகிறார்!
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகப் பெரிய வெற்றி கண்டவர் ஜெசிந்தா என்பது நினைவிருக்கலாம்.
உலக நாடுகள் அனைத்தும் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் மிக மிக அழகாக நேர்த்தியோடு திட்டமிட்டு படிப்படியாக தொற்றின் தாக்கத்தை குறைத்ததோடு அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்படாமல் தடுத்தும் சாதித்தவர் ஜெசிந்தா.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்!
போர் வேகத்தில் ஜெசிந்தா
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஜெசிந்தா காட்டிய வேகம், ஈடுபாடு, அக்கறைக்குப் பரிசாகவே இந்தப் பதவியை மக்கள் 2வது முறையாக அளித்துள்ளனர் என்று கருதப்படுகிறது. 40 வயதாகும் ஜெசிந்தா நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் இன்னொரு புதிய சாதனையையும் படைத்துள்ளார். அதாவது அவரது தொழிலாளர் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
சவால்கள் இருக்கு
இருப்பினும் சில சவால்களும் ஜெசிந்தாவுக்கு உள்ளது. முதல் ஆட்சியை அவர் அமைத்தபோது பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உறுதியளித்திருந்தார். ஆனால் அதை அவரால் செய்ய முடியவில்லை. முதல் ஆட்சிக்காலத்தை அவர் தேசியவாத கட்சியுடன் இணைந்து நடத்தி வந்ததால் பல முற்போக்கு சீர்திருத்தங்களை அவரால் செய்ய முடியாமல் போய் விட்டது. இடையில் கொரோனா வேறு குறுக்கிட்டு விட்டதால் நிலைமை மோசமானது. இந்த முறை அதை அவர் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
நன்றி மக்களே
வெற்றிக்குப் பின்னர் ஜெசிந்தா மக்கள் மத்தியில் பேசியபோது, கடந்த 50 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் கொடுக்காத ஆதரவை நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு கொடுத்துள்ளீர்கள். இது மிகப் பெரும் கெளரவமாகும். நீங்கள் கொடுத்த இந்த அதிகாரத்தை நாங்கள் தவறாக பயன்படுத்த மாட்டோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் உகந்த ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என உறுதி அளிக்கிறேன் என்று கூறினார் ஜெசிந்தா.
மக்கள் நம்பிக்கை
ஜெசிந்தாவின் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியை அக்கட்சியினர் மிகப் பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். இதற்கிடையே, ஜெசிந்தாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து அவரது கட்சியுடன், முதலாவது ஆட்சியின்போது கூட்டணி வைத்திருந்த தேசியவாத கட்சியின் தலைவர் ஜூடித் காலின்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மக்கள் இவர் பக்கம்
இத்தேர்தலில் ஜெசிந்தா கட்சிக்கு 49 சதவீத வாக்குகள் கிடைத்தன. தேசியவாத கட்சிக்கு 27 சதவீத வாக்குகள் கிடைத்தன. அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளது. ஜெசிந்தா பதவிக்கு வந்தது முதலே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அவர் செய்த ஒவ்வொரு செயலும் மக்களால் பாராட்டப்பட்டது. குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர் அசத்தி விட்டார். மக்களைக் காக்க அவர் எடுத்த நடவடிக்கைகளை நியூசிலாந்து மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் கூட வியந்து பாரட்டினர். இதுதான் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளது.