கஞ்சா கேஸில் சிக்கிய ஜாக்கிசான் மகனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை – பீஜீங் கோர்ட் உத்தரவு
ஷாங்காய்: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். சீனாவை சேர்ந்தவரான இவருக்கு ஜெய்சீ சான் என்ற மகன் உள்ளார். இவரும் ஜாக்கிசானை போன்று நடிகர் மற்றும் பாடகராக உள்ளார்.
போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர் வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 100 கிராம் எடையுள்ள "மரிஜுவானா" என்ற போதைப்பொருள் அவரது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு கிழக்கு பீஜிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெய்சீக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 2000 யுவான் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெய்சீ சிறையில் உள்ளதால் அடுத்த மாதமே அவர் விடுதலையாகி விடுவார் என்று தெரிகிறது.