பாகிஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு- ரயில் தடம் புரண்டதில் 6 பேர் காயம்
லாகூர்: பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இன்று காலை சிந்து மாநிலத்தின் ஜகோபாபாத் என்ற இடத்தில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இதில் 10 முதல் 12 அடி வரை தண்டுவாளம் பெயர்ந்தது.
இதனால் அந்த வழியாக வந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. எஞ்ஜின் மற்றும் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கின. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு மாவட்ட ஜெயில் அருகே நடைபெற்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குண்டு வெடித்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். உடனடியாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
சிந்து மாநில முதல்வர் சையத் குவாய்ம் அலி ஷா இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்து விட்டு மாவட்ட அதிகாரிகள் மற்றும் கமிஷனர் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.