கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயற்சி.. அமெரிக்கப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
செல்பி எடுக்க முற்பட்ட பெண்ணை கருஞ்சிறுத்தை தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பீனிக்ஸ்: அமெரிக்காவில் பாதுகாப்பு பகுதியைத் தாண்டிச் சென்று செல்பி எடுக்க முயற்சித்த பெண் பார்வையாளரை கருஞ்சிறுத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் கேமரா வந்த நாள் முதல் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் செல்பி மோகம் ஆட்டிப் படைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக பதிவு செய்ய நினைத்து, சமயத்தில் ஆபத்தை தாங்களே விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர்.
இப்படித்தான் சமீபத்தில் செல்பி மோகத்தால் கருஞ்சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் பெண் ஒருவர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் பீனிக்சில் உள்ள உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று, 30 வயது பெண் ஒருவர் சுற்றிப் பார்க்க வந்துள்ளார். கருஞ்சிறுத்தை அடைக்கப்பட்டிருந்த கூண்டுப் பக்கம் வந்த அவருக்கு செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது.
அதனைத் தொடர்ந்து செல்பியில் கருஞ்சிறுத்தை தெளிவாகத் தெரிய வேண்டும் என, பாதுகாப்பு பகுதி தடுப்பையும் தாண்டி கூண்டின் மிக அருகில் சென்றுள்ளார் அவர். பின்னர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.
அப்போது, அவர் எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென சிறுத்தை, அப்பெண்ணைத் தாக்கியது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்பி ஆசையால் கருஞ்சிறுத்தையின் தாக்குதலுக்கு பெண் ஒருவர் ஆளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.