நவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் எதிர்ப்பு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் அத்தார் மினால்லா மற்றும் மியான்குல் ஹசன் அவுரங்கசீப் ஆகியோர் கேட்டறிந்தனர்.
இன்று தனது இடைக்கால உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரிப் அவர் மகள் மர்யம், முன்னாள் ராணுவ கேப்டன் சப்தார் ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேசிய அக்கவுண்டபிளிட்டி பிரிவு தரப்பில் இன்னும் முழுமையாக வாதம் முன் வைக்கப்படவில்லை. இன்று சில நிமிடங்கள் மட்டுமே, அந்த தரப்பு வழக்கறிஞர் அக்ரம் குரேஷி வாதிட்டார். இதையடுத்து ஷெரீப் வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாக். லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதற்கான நிதி ஆதாரத்தை இவரால் காண்பிக்க முடியவில்லை.
கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு நீதி மன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி கைதுக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.