எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... கொரோனாவில் இருந்து தப்பிக்க மொத்த விமானத்தையே புக் செய்தவர்
ஜகார்த்தா: கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர், விமானத்திலுள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து பயணித்துள்ளார்.
கொரோனா பரவலிலிருந்து தப்பிக்க மாஸ்க்களை அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் தான்.
ஆனால், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இந்த நபர், இவற்றை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுள்ளார் என்றே கூற வேண்டும். கடந்த ஜனவரி 4ஆம் தேதி ரிச்சர்ட் முல்ஜாடி அவரது மனைவியுடன் விமானத்தில் பயணித்துள்ளார்.
விமானத்தில் மற்றவர்களுடன் பயணித்தால் எங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் மொத்த விமானத்தையுமே புக் செய்துள்ளார். காலியான விமானத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் ரிச்சர்ட் முல்ஜாடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "தனியார் ஜெட் விமானத்தில் செல்லும் செலவைவிட இந்த விமானத்தில் இருக்கும் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்யக் குறைந்த செலவே ஆனது" என்று பதிவிட்டிருந்தார்.
விமானத்தில் வேறு யாரும் ஏறவில்லை என்பதைப் பல முறை உறுதி செய்ததாகவும் மற்ற பயணிகள் இருந்தால் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், ரிச்சர்ட் முல்ஜாடி கூறியுள்ளதை விமான நிறுவனம் மறுத்துள்ளது. ரிச்சர்ட் முல்ஜாடி வெறும் இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்ததாக உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் விமான நிறுவனம் கூறியுள்ளது.