ஜல்லிக்கட்டு ஆதரவாக சிலிர்த்தெழுந்த சிகாகோ தமிழர்கள் - அசத்தும் வீடியோ
சிகாகோ: ஜல்லிக்கட்டை ஆதரித்து சிகாகோ வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டு முழு ஆதரவு போராட்டம் நடத்தி அதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜல்லிக்கட்டு தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது.மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான எந்த முயற்சி எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் பற்றி எரியத் தொடங்கிய போராட்டம் இன்று அமெரிக்காவின் சிகாகோ வரை நீண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வாழ்ந்து வரும் தமிழர்கள் ஒன்று கூடி தமிழகத்தில் நடக்கவிடாமல் தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். அதில் பெண்கள், குழந்தை அனைவரும் ஜல்லிக்கட்டை ஆதரிப்போம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ள பேனர்களை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
குழந்தைகளுடன் ஜல்லிக்கட்டு
இந்தப் போராட்டத்தின் போது, குழந்தைகளுக்கு காளை வடிவில் முகமூடி அணிவிக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், முகமூடியுடன் ஓடி வரும் குழந்தைகளை காளையை பிடிப்பது போன்று பிடித்து குழந்தைகளுக்கு ஜல்லிக்கட்டு எப்படி நடக்கும் என்பதை புரிய வைக்கும் வகையில் நடத்தப்பட்டது.
தமிழர் விளையாட்டு
இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடி விளையாட்டையும் விளையாடி ஆண்கள் விளையாடினார்கள். ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் வேட்டியும், பெண்கள் புடவை அணிந்து, சிறுமியர் பாவாடைச் சட்டை அணிந்து இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிகாகோவில் போராட்டம்
இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு சீனிவாசன் ஜெயராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: சிகாகோவில் வசித்து வரும் தமிழ் நண்பர்கள் இணைந்து இதை நடத்தினோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் நடத்தினோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 மணிக்கு நடந்த இந்த போராட்ட நிகழ்ச்சியில் 35 பேர் கலந்து கொண்டோம். இவர்களில் 10 பேர் சிறார்கள்.
புதிய தலைமுறைக்கும் புரிய…
இதை வெறும் போராட்டமாக நடத்த நாங்கள் விரும்பவில்லை. காரணம் எங்களது பிள்ளைகள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று தெரியவில்லை. எனவே அவர்களுக்கு ஜல்லிக்கட்டைப் புரிய வைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக இதை நடத்தினோம்.
குழந்தைகளின் ஈடுபாடு
நமது கலாச்சாரம் என்ன, ஜல்லிக்கட்டு என்றால் என்ன, எப்படி அது நடக்கும் என்று அவர்களுக்குத் தெரிய வைக்கும் வகையில் நடத்தினோம். மாதிரி ஜல்லிக்கட்டையும் கூடவே கபடி விளையாட்டையும் விளையாடிக் காட்டினோம். தற்போது அவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற ஞானம் வந்துள்ளது.
மகிழ்ச்சி
குறுகிய கால அவகாசத்தில் இதை செய்தோம். முதலில் இந்திய தூதரகம் முன்பு நடத்தத் திட்டமிட்டோம். ஆனால் நிறைய பார்மாலிட்டிகள் இருந்ததால் அதைக் கைவிட்டு விட்டு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து நடத்தினோம். மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுத்துள்ளது என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.