பீட்டாவின் இந்தியக் கிளையை மூடுங்கள்! - பீட்டா தலைமையகம் முன் பெரும் போராட்டம்!
நார்ஃபோல்க்(யு.எஸ்): பீட்டாவின் தலைமையிடம் அமைந்துள்ள வர்ஜீனியா மாநிலம் நார்ஃபோல்க் நகரில் பெரும் திரளாக தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பீட்டாவின் தலைமை அலுவகத்திற்கு எதிரே திரண்டு, பீட்டாவின் இந்திய கிளையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நார்ஃபோல்க் நகராட்சியில் முறைப்படி அனுமதி பெற்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது..
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 5 மணி வரையிலும் (அமெரிக்க நேரப்படி இன்று அங்கு ஞாயிற்றுக்கிழமை) பீட்டா அலுவலகத்திற்கு எதிரே இந்த போராட்டம் நடைபெற்றது.
வர்ஜீனியா, மேரிலாண்ட், டெலவர், கனக்டிக்கட்,மசசூசட்ஸ், பென்சில்வேனியா, நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், வடக்கு கரோலைனா, ஜார்ஜியா, மிஷிகன், ஒஹயோ போன்ற தொலை தூர மாநிலங்களிலிருந்தும் சுமார் 1000 தமிழர்கள் வருகை தந்திருந்தார்கள்.
கார் மற்றும் விமானம் மூலம் குடும்பம் குடும்பமாக வர இருப்பதாக தெரிகிறது. மேற்கே கலிஃபோர்னியா உள்ளிட்ட நீண்ட தூர மாநிலங்களிலிருந்தும் விமானத்தில் வந்திருந்தனர்.
இந்தியாவில் பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப் படுத்தி இந்த போராட்டம் நடந்தது.. பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய போரட்ட நிகழ்ச்சியை ஜனகன பாடி முடித்து வைத்தார்கள். போரட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்த ஐக்கிய தமிழ் அறக்கட்டளை (United Tamil Foundation, USA) சார்பில் பீட்டா தலைமை அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை விட்டு பீட்டா வெளியேற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு ராஜா தெரிவித்தார்.
அமெரிக்கத் தமிழர்களும் பீட்டாவுக்கு வேட்டு வைக்கலாம்....
ஏற்கனவே வர்ஜீனியா மாநிலத்தில் பீட்டா மீது , காப்பகத்திற்கு வரும் 97 சதவீதம் பூனை நாய் உள்ளிட்ட விலங்குகளை கொலை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. நுகர்வோர் சுதந்திர மையம் ' பீட்டா விலங்குகளைக் கொல்கிறது' என்ற குற்றச்சாட்டுடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பீட்டா நிர்வாகிகள் மீது வீட்டு விலங்குகளை துன்புறுத்திய மற்றும் கொன்ற குற்றங்களுக்காக வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2014 ம் ஆண்டு மட்டும் சுமார் 4 கோடி ரூபாய், அமெரிக்க பீட்டா நிறுவனத்திலிருந்து இந்திய கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பீட்டாவின் நடவடிக்கைகள், பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும்
புண்படுத்துவதோடு, நாட்டின மாட்டு இனத்தை அழிக்கும் வகையிலும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, வர்ஜீனியா நீதிமன்றத்தில் தமிழர்களும் இணைந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஐ.நா சபையின் 2007ம் ஆண்டு பிரகடனத்தின் படி, பழங்குடி மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு பாரம்பரியம், கலாச்சாரம், விவசாயம் வாழ்க்கை முறை, கால்நடைகள் உள்ளிட்டவற்றை அவர்களே நிர்வகித்து நடைமுறைப் படுத்த ஆவன செய்துள்ளது.
2500 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்டுள்ள இலங்கியங்களின் சான்றுடன் விளங்கும் தமிழ் இனமும் இந்த அடிப்படையில் பாரம்பரியமிக்க ஜல்லிகட்டையும் நாட்டின இன பெருக்கத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இதே அடிப்படையில் வர்ஜீனியா மாநிலத்தில் பீட்டாவுக்கு எதிரான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தமிழர்களும் தங்களை சேர்த்துக் கொள்ள கேட்க முடியும். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெற்ற தமிழர்கள், தங்கள் இனத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் கால்நடைகளுக்கு பீட்டா தீங்கு விளைவித்துள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கூடுதல் மனுதாரர் ஆகலாம்.
போராட்டத்திற்காக திரளும் தமிழர்கள் பீட்டா அலுவலகத்தை மூடச்சொல்லி நார்ஃபோல்க் நகராட்சிக்கும் மனு கொடுக்கலாம்.
30000 விலங்குகளைக் கொன்ற பீட்டாவின் அவலத்தை முதன் முதலில் (ஜனவரி 2ம் தேதி) தமிழகத்தில் வெளிப்படுத்தியது ஒன் இந்தியா தமிழ் என்பது குறிப்பிடத் தக்கது.
-இர தினகர்