இன்னொரு புல்வாமா தாக்குதல் நடக்கும்.. பாக் .பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்து ஆவேச பேச்சு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இருப்பது இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கே வழிவகுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 70 ஆண்டுகளாக இருந்த சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது. தனி கொடி, தனி சட்டம், இந்தியர்களால் சொத்து வாங்க முடியாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்ட 370வது பிரிவு மற்றும 35 ஏ பிரிவினை பிரதமர் மோடி தலைமையிலான அரசு துணிச்சலாக நீக்கியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு நேற்று முதலே தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தை அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அவசரமாக கூட்டினார்.
நசுக்கிவிட முடியாது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எம்பிக்கள் நிறைந்த அவையில் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், "மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரதது செய்யும் முடிவின் மூலம் காஷ்மீர் மக்களை நசுக்கிவிட முடியாது. பாரதிய ஜனதா கட்சி அவர்களின் முன்னோர்களின் இனவெறி சித்தாந்த அடிப்படையில் செயல்படுகிறது. அவர்கள் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயன்றார்கள். அப்படித்தான் இப்போது பாஜக செயல்படுகிறது.
ஆர்எஸ்எஸ் கொள்கை
ஆர்எஸ்எஸ் இந்தியாவை இந்துக்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று விரும்புவதையும், அவர்கள் அங்குள்ள எந்த முஸ்லீம்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கவே கருதுவார்கள் என்பதையும் முன்பே அறிந்து பாகிஸ்தானை உருவாக்கிய நமது தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற விரும்புகிறேன்.
இருதேச கொள்கைதான் சரி
பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடாது என என்னை முன்பு சந்தித்த காஷ்மீர் தலைவர்கள் சொன்னார்களே.. ஜின்னாவின் இருதேசக்கொள்கைதான் செல்லுபடியாகும் என்பது இன்று தெரிந்து இருக்கும்.
பாகிஸ்தானில் அனைவரும் சமம்
இந்தியாவில் இந்துக்கள் முதல் தரமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அனைத்து மக்களும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மோடி அரசின் செயல் இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கே வழிவகுக்கும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி ஐநாவில் முறையிடுவோம்.பாஜக சித்தாந்தத்தின் கீழ் இந்தியாவில் முஸ்லீம்கள் நடத்தப்படுவது பற்றி சர்வதேச அளவில் முறையிடுவோம்" இவ்வாறு கூறினார்.