விமான விபத்தில்தான் சுபாஷ் உயிரிழந்தார்… உறுதிபடுத்தியது ஜப்பான் அரசு
லண்டன்: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என்று ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர். இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. பலர் அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்பி வருகின்றனர். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் பெரிய சர்ச்சையாகவே இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.
சுபாஷின் மரணம் குறித்த சர்ச்சைகளை அடுத்து, அவர் மறைந்தது உண்மை தானா என்பதை விசாரிக்க 3 விசாரணை கமிஷன்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அதில் 2 விசாரணை கமிஷன்கள், சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்தது உண்மைதான் என்று கூறின. ஆனால் நீதிபதி எம்.கே. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3வது விசாரணைக் கமிஷன் மட்டும் விமான விபத்திற்கு பின்பும் நேதாஜி சுபாஷ் உயிரோடு இருக்கிறார் என்று கூறியது. ஆக, சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள், 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமான தளம் அருகே நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று தெளிவாக்கியுள்ளது.
ஜப்பான் வெளியிட்டுள்ள 17 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் 7 பக்கங்கள் ஜப்பான் மொழியிலும் 10 பக்கங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் விமான விபத்து நடந்த உடன் சுபாஷ் சந்திரபோஸ் படுகாயத்துடன் பிற்பகல் 3 மணி அளவில் தைபே ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரவு 7 மணிக்கு உயிரிழந்தார் என்று ஆவணத்தில் காணப்படுகிறது. மேலும், ஆகஸ்டு 22ம் தேதி தைபேயில் நேதாஜி சுபாஷ் சந்தர போஸ்சிற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதற்கான குறிப்புகளும் ஆவணத்தில் காணக் கிடைக்கின்றன.