ஜப்பானை உலுக்கும் தொடர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; 1500 பேர் படுகாயம்!
டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பத்துபேர் உயிரிழந்து சுமார் 650 பேர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
மிகமோசமான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல அடுக்குமாடி வீடுகளும், தனி வீடுகளும் இடிந்து விழுந்தன. சாலைகளில் பிளவு ஏற்பட்டு, பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஏராளமான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்றைய நிலநடுக்கத்தால் கியூஷு தீவுக்கு அருகாமையில் உள்ள ஒரு எரிமலை வெடித்து, தீப்பிழம்பை கக்கி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1500க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பலரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பேரிடர் நிவாரணம் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளாட்சிதுறை சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதவிர மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுமார் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அணை ஒன்று உடையக்கூடிய அபாயம் உள்ளதாக கூறப்பட்டதையடுத்து அருகில் இருந்து மட்டும் சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.