ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 7 அலகுகளாக பதிவு; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!
டோக்கியோ: ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தென்மேற்கு கடற்கரையில் இன்று அதிகாலை 5.50 மணியளவில், 7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து, ஜப்பான் வானிலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா எல்லை மற்றும் சட்சுனான் தீவுகளில் 3 அடி உயரத்திற்கு கடலலை சீற்றத்துடன் காணப்படுகின்றது. அவை பெரிய சுனாமி அலைகளை உருவாக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக உள்ளன" என்று தெரிவித்துள்ளது.
மேலும், 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ரிக்டர் அளவிற்கு பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையோரப் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான வேறு இடத்திற்கு செல்லுமாறு ஜப்பான் வானிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலுக்கிய சுனாமியில் சிக்கி 18,000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததும், 2,30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்து தவித்ததும் குறிப்பிடத்தக்கது.