அமெரிக்க போர்க் கப்பலை தூள் தூளாக்குவோம் என வட கொரியா எச்சரிக்கை.. காப்பாற்ற களமிறங்கிய ஜப்பான்!
எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் அமெரிக்க கப்பலைத் தூள் தூளாக்குவோம் என்று வடகொரியா மிரட்டியது.அதனையடுத்து அமெரிக்க கப்பலை பாதுகாக்க கொரிய கடல்பகுதிக்கு, ஜப்பான் நாட்டுப் போர்க்கப்பல் விரைந்துள்ளது.
சியோல்: அடிக்கடி அமெரிக்காவும் வடகொரியாவும் ராணுவ அறிவிப்புகள் மூலம் மோதிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் அண்மையில்தான் வடகொரியா எந்த நேரத்திலும் அணுகுண்டை வெடித்து சோதனை செய்வோம் என்று எச்சரிக்கை செய்திருந்தது.இந்த நிலையில் கொரிய கடல்பகுதிக்கு அமெரிக்கா போர்க் கப்பலை அனுப்பியுள்ளது. இதனால் அந்தக் கப்பலை தகர்ப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை செய்துள்ளது.
எனவே, அமெரிக்க நாட்டுக் கப்பலுக்குப் பாதுகாப்பை வழங்க செய்துள்ள முடிவு செய்துள்ள தோழமை நாடான ஜப்பான், தனது மிகப்பெரிய போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.இதனால் கொரிய கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு எந்த போரிலும் ஈடுபடுவதில்லை என்பதில் ஜப்பான் அரசு உறுதியாக இருக்கிறது.அதேநேரம் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ராணுவம் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட ஜப்பான் அரசு சட்ட விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்தத் திருத்தம் செய்யப்பட்ட பிறகு இன்னொரு நாட்டின் கப்பல் பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் ஒன்றை ஜப்பான் அனுப்பியுள்ளது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.