இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் பப்புவா மற்றும் தனிம்பார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் ஜப்பானின் கிழக்கு பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை.
ஜப்பானிலும், இந்தோனேஷியா ஆகிய இரண்டு நாடுகளுமே பூமியின் நில அதிர்வு அதிகம் நிறைந்த பகுதியில் இருப்பதால் அங்கு நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படும் ஒன்றாக உள்ளது. பசுபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்தோனேஷியாவில் மிக அதிக அளவு நில நடுக்கம் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஜப்பான் காணப்படுகிறது. இங்குதான் 20 சதவீதம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இது ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது அதற்கு மேலாக பதிவாகி வருகிறது.
கடந்த வாரம் இந்தோனேஷியாவின் பப்புவா தீவில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஸ்லேவேசி தீவில் உள்ள பாலு நகரில் சுனாமி தாக்கியது. இதில் 2200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் மாயமாகினர். கடநத் 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின்பான சுனாமி தாக்கியதில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று காலை (உள்ளூர் நேரம் 10.05) இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் அபேபுரா நகரத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் 21 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவரவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. இதேபோல் இந்தோனேஷியாவின் பாண்டா கடலை ஒட்டிய தனிம்பார் தீவுகளில் இன்று காலை 7.2 என்ற அளவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரம் வரை உணரப்பட்டது.
இதேபோல் டோக்கியோ நகரம் அமைந்துள்ள ஜப்பானின் கிழக்கு பகுதியிலும் இன்று காலை (ஜப்பான் நேரம் (9.16 ) நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அங்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏதுவும் தகவல் தெரியவில்லை. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. வீடுகள் மற்றும் ஜன்னல்களை குலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் மக்கள் பீதியில் உறைந்தனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறி தரைப்பகுதிக்கு ஓடிவந்து குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதுவும் இதுவரை விடப்படவில்லை.