ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்? பரபரப்பு தகவல்
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இந்திய பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படுவதாக இருந்த நிலையில் தனது பயணத்தை அவர் ரத்து செய்யக் கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, வரும் 15 வ, 16, 17 ஆகிய தேதிகளில் மூன்று நாள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேசுவதாக இருந்தார்.. இந்த சந்திப்பை அசாம் தலைநகர் குவஹாத்தியில் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இரு நாட்டு தலைவர்களும் வரும் 17ஆம் தேதி மணிப்பூர் சென்று, இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த ஜப்பான் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அசாமில் வன்முறை
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அங்கு வரலாறு காணாத வன்முறையும், மக்களின் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.
மோடியை சந்திப்பது
இதன் காரணமாக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் குவஹாத்தியில் சந்தித்துப் பேசுவது கேள்விக்குறியாகி உள்ளது.
பயணம் ரத்து
இதனிடையே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படுவதாக இருந்த நிலையில் அவரது தனது பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜப்பானின் ஜிஜி நிறுவன செய்திகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உச்சி மாநாடு
டிசம்பர் 15 முதல் 17 ம் தேதி வரை குவஹாத்தியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு நடைபெறுமா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியிருந்தது.