ப்பா.. பயங்கர ஸ்பீடுப்பா இந்த ரயில்.. தன் உலக சாதனையை தானே முறியடித்த ஜப்பான் ரயில்!
டோக்கியோ: இந்த புல்லட் ரயிலை அதி வேக பறவை என்கிறார்கள்.. சூப்பர் சானிக் விமானம் என்று செல்லமாக அழைக்கிறார்கள். அப்படி ஒரு அதி வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளது இந்த ஜப்பானின் புதிய புல்லட் ரயில்.
இந்த புல்லட் ரயில் மணிக்கு 603 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லக் கூடியது. சோதனை ரீதியாக இந்த வேகத்தில் செவ்வாய்க்கிழமையன்று, யமனாசி நகரில் இந்த ரயில் வெற்றிகரமாக இயக்கிப் பார்க்கப்பட்டது. இந்த வேகத்தில் இதுவரை உலகில் எந்த ரயிலும் ஓடியதில்லை என்பதால் இது புதிய உலக சாதனையாகவும் அமைந்தது.
மொத்தம் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் பயணித்தது. இந்தத் தூரத்தைக் கடக்க அதற்கு 10.8 விநாடிகளே தேவைப்பட்டனவாம்.
இந்த ரயில் பயணித்தபோது, அதன் வேகத்தைப் பார்த்து அக்கம் பக்கத்தில் பெரும் ஆச்சரியம் அடைந்தனராம். கண் மூடித் திறப்பதற்குள் ரயில் காணாமல் போய் விட்டதாக அவர்கள் பிரமிப்புடன் கூறினர். மேலும் அந்த ரயில் கின்னஸ் சாதனை படைத்திருப்பதை அறிந்து கைதட்டி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த ரயிலானது சோதனை டிராக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது மணிக்கு 590 கிலோமீட்டர் என்ற வேகத்தில் பயணித்திருந்தது. தற்போது அந்த சாதனையை அதுவே முறியடித்துள்ளது.
மேலும் இதற்கு முன்பு 2003ல் நடந்த ஒரு புல்லட் ரயில் சோதனையின்போது அந்த ரயிலானது மணிக்கு 581 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருந்தது. அந்த சாதனையும் தற்போது காலியாகி விட்டது.
உலகிலேயே அதி வேகமான புல்லட் ரயில் தற்போது சீனாவில்தான் உள்ளது. அந்த ரயிலானது ஷாங்காய் வழியாக இயக்கப்படக் கூடியது. அது மணிக்கு 431 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தற்போது ஜப்பான் அதை முறியடிக்கிறது.
அதேசமயம், அமெரிக்காவில் உள்ள அதி வேகமான ரயிலான அசெலா எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லக் கூடியதாகும்.
ஜப்பானில் உள்ள புல்லட் ரயில்கள், தண்டவாளத்திலிருந்து 10 செமீட்டர் உயரத்தில் பறந்தபடி பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2027ம் ஆண்டு டோக்கியோ - நகோயா இடையே இந்த அதி வேக புல்லட் ரயிலை இயக்கவுள்ளது ஜப்பான். இந்த தூரத்தை சாலை மார்க்கமாக கடக்க 5 மணி நேரமாகும். ஆனால் புல்லட் ரயிலில் முக்கால் மணி நேரத்தில் போய் விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் சுருங்குகிறது என்பது இதுதான் போல!