புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் ஜப்பான்
புகுஷிமா: புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனி சுவர் கட்டும் பணியை ஜப்பான் தொடங்கியுள்ளது.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பயங்கர சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் புகுஷிமா அணுமின் நிலையம் பலத்த சேதம் அடைந்தது.
செயல்படாத மூன்று அணு உலைகளில் இருந்த தொடர்ந்து வெளியேறும் கதிரியக்கம் கலந்த நீர் பூமியில் உள்ள நிலத்தடி நீருடன் கலப்பதுடன் கடலிலும் சென்று கலப்பது அழிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே இருந்து வருகின்றது.
இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதென்பது இந்த அணுமின் நிலையத்தின் பொறுப்பை ஏற்றிருக்கும் டெப்கோவிற்கு ஒரு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்தப் பாதுகாப்பு பணியின் ஒரு கட்டமாகவே புகுஷிமாவின் நிலத்தடியில் பனி சுவர் கட்டும் திட்டம் கடந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நடைமுறை நீர்நிலைகள் அருகில் நிலத்தடி சுரங்கங்களின் கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பு முறையாகும். இதேபோன்று அணுமின் நிலையத்தின் அடியில் கட்டப்படும் பனி தடுப்பு சுவர் நிலத்தடி நீருடன் கதிரியக்க நீர் கலக்காமல் நேரடியாக கடலில் சென்று கலக்கும் என்று குறிப்பிடப்பட்டது.
ஜப்பானின் தேசிய கண்காணிப்பு அணு ஒழுங்குமுறை ஆணையம் டெப்கோ நிறுவனத்திற்கு கடந்த வாரம்தான் இதற்கான ஒப்புதலை அளித்தது. எனினும், இத்தகைய நடைமுறை இதற்கு முன்னால் இதுபோன்றதொரு திட்டத்திலோ அல்லது இவ்வளவு நீளமான கால வரையரையிலோ செய்யப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், புகுஷிமா ஆலையின் கதிரியக்க வெளியேற்றத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது என்பதற்கு பல வருடங்கள் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி அங்குள்ள சில குடியேற்றங்கள் கைவிடப்படவேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.