ஜப்பான் கப்பலில் பரிதவிக்கும் 138 இந்தியர்கள்! 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
Recommended Video
டோக்கியோ: ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தினமும் 100க்கணக்கானோர் உயரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஹாங்காங்கில் இருந்து, 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதில், 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கியு இருக்கிறார்கள்.. கொரோனா பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியுள்ளது.
ஜப்பான் கப்பல்
இந்நிலையில் அந்த சொகுசு கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள அனைவரையும் சோதிக்க ஜப்பான் முடிவு செய்திருக்கிறது.
கொரோனா பாதிப்பு
இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் இதை உறுதி செய்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் ஊர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர்.
மீட்க கோரிக்கை
இதற்கிடையே ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்து பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.தங்கள் பிள்ளைகளை, கணவர்களை மீட்க வேண்டும் என பலரும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
அரசு அதிரடி திட்டம்
இதனிடையே ஜப்பான் கப்பலில் மொத்தம் உள்ள 3700 பேரில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்யும் உட்கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்கம் முன்பு தெரிவித்தது.. ஆனால், அனைவரையும் சோதனை செய்த பிறகே கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கப்பலில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.