டோக்கியோவைத் தாக்கிய ’விப்ஹா’ புயல்: 13 பேர் பலி
டோக்கியோ: ஜப்பானைத் தாக்கிய விப்ஹா புயலால் 13 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜப்பானைத் தாக்கும் பயங்கரப் புயல் வரிசையில், விப்ஹா புயல் டோகியோவைத் தாக்கியுள்ளது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள், புல்லட் ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஜப்பானில் சியா மாகாணத்தில் கோஷி என்ற இடத்தில் நேற்று ‘விபா' என்ற புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 65 கி.மீட்டர் வேகத்தில் கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் இஷு ஒஷிமா தீவு பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் 122 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும்.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
டோக்கியோவிற்கு 10 ஆண்டுக்கு ஒரு முறையில் இதுபோன்ற புயல் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் தாக்கிய புயல் மற்றும் கனமழைக்கு சுமார் 100 பேர் பலியானதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்களுக்கு சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது