காய்கறி வாங்கணும்னா ஆம்பளைங்க போங்கப்பா.. பெண்கள் போனா வர ரொம்ப நேரமாகுது.. வாங்கி கட்டி கொண்ட மேயர்
சர்ச்சை கருத்தை கூறி வம்பில் மாட்டி கொண்டார் ஜப்பான்மேயர்
டோக்கியோ: ஆண்கள் கடைக்கு போனால் சட்டு புட்டென்று வாங்கி வந்து விடுகிறார்களாம். அதுவே பெண்கள் போனால் ரொம்ப டைம் எடுக்கிறார்களாம். இதைச் சொன்னது ஜப்பானைச் சேர்ந்த மேயர் ஒருவர். இதனால் அங்கு தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
பெண்கள் கடைக்குப் போனால் டைம் ஆகும், லேட்டாகும் என்பதை வைத்து ஏகப்பட்ட ஜோக்குகள், கலாய்ப்புகள் நம்ம ஊரில் உண்டுதான். இதை இங்குள்ள பெண்களும் சரி, ஆண்களும் சரி ஜாலியாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் ஜப்பானில் இதை ஒருவர் பேசப் போக அது பெரும் சர்ச்சையாகி விட்டது. அதாவது பலசரக்குக் கடைக்குப் போனால் பெண்கள் அதிக நேரம் எடுப்பதாகவும், ஆண்கள் வேகமாக பர்ச்சேஸ் செய்வதாகவும் அந்த மேயர் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
இந்த சர்ச்சைப் பேச்சைப் பேசியவர் பெயர் இசிரோ மட்சுய். இவர் ஒசாகா நகரத்தின் மேயர் ஆவார். ஜப்பானிலேயே மூன்றாவது பெரிய நகரம்தான் ஒசாகா. இந்த நகரத்து மேயர்தான் இப்படிப் பேசியுள்ளார். தற்போது கொரோனாவைரஸ் பிடியில் சிக்கி ஜப்பானும் சிரமப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் அலட்சியமாக இருந்தனர். இப்போதுதான் சுதாரித்துள்ளனர்.
சமீப வாரங்களாக அங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு முடுக்கி விட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஜப்பானில் 13,100 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 330 பேர் உயிரிழந்துள்ளனர். மார்ச் 1ம் தேதி வெறும் 243 கேஸ்களே அங்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொது இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மளிகை சாமான் கடைகளுக்கு பெண்களுக்குப் பதில் ஆண்கள் வரலாம். அவர்கள் வந்தால் சீக்கிரமாக பர்ச்சேஸை முடித்துக் கொண்டு செல்வார்கள். பெண்கள் வந்தால் நேரமாகிறது என்று கூறியுள்ளார் மேயர் மட்சுய். பெண்கள் ஒவ்வொரு பொருளையும் எடுத்துப் பார்த்து யோசித்து வாங்கி முடிப்பதற்குள் ரொம்ப தாமதமாகிறது என்பது மட்சுய் சொல்லும் கருத்து.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் பெண்கள்தான் அதிக நேரம் கடைக்குள் இருக்கிறார்கள். ஆண்கள் போன வேகத்தில் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி விடுகிறார்கள். எனவே ஆண்கள் அதிகம் வருமாறு இருந்தால் கூட்டம் கூடுவதையும் குறைக்கலாம் என்றார் இது அங்கு புயலைக் கிளப்பி விட்டது.
Recommended Video
இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் ஷோகோ எகவா கூறுகையில், வீட்டு வேலை ஏதாவது தெரிந்தால்தானே.. எதுவும் தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று மட்சுய் தலையில் கொட்டியுள்ளார். எல்லாம் சரிதான்.. வேகம் வேகமாக கிடைத்ததை அள்ளிக் கொண்டு ஓடும் ஆண்கள் வீட்டுக்குப் போய் பொண்டாட்டியிடம் திட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதையும் மட்சுய் சொல்லியிருந்தால் நல்லாருக்கும்!.