வாடகைக்கு அழகான ஆண்களைப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விடும் கம்பெனி... இது ஜப்பான் அட்ராசிட்டி!
டோக்கியோ: மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்கு அழுதால் கண்ணீரைத் துடைத்து விடுவதெற்கென்று ஜப்பானில் ஒரு நிறுவனம் சில ஆண்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது.
மன அழுத்தம் என்பது மனிதர்களை உள்ளிருந்தே கொல்லும் ஒன்றாக மாறி வருகிறது. மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்வதற்கு வழியில்லாமல், ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
எனவே, மன அழுத்தம் பாதிக்கப்பட்ட பெண்கள் வாடகைக்கு ரூம் எடுத்து ஆசை தீர அழுது தீர்க்க ஏற்கனவே வெளிநாட்டில் சிறப்பு ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.
புதிய ஆஃபர்...
இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு ஆஃபர் வழங்கியிருக்கிறது ஐக்கேமேசோ டான்ஷி என்கிற ஜப்பான் நிறுவனம். இந்த நிறுவனமானது பெண்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது ஆறு ஆண்களை பணியமர்த்தியுள்ளது.
ஆண்களை ஆர்டர் செய்யலாம்...
சோகமாக, மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் இந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டிய ஆளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம். அந்த ஆண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுடன் இணைந்து சோகமான படங்களை ஒன்றாக பார்ப்பார்கள்.
கட்டணம்...
சம்பந்தப்பட்ட பெண் அழுதால் கண்ணைத் துடைத்து விடும் வேலையைக் கூட அந்த ஆண்கள் செய்வார்கள். இதற்கு ஏழாயிரத்து அறுநூறு யென் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நான்காயிரம்) கட்டணமாக செலுத்த வேண்டும்.
பல் தேய்க்கும் பிரஷூடன்...
இந்த ஆறு ஆண்களில் ஒருவர் கையில் பல் தேய்க்கும் பிரஷூடன் போஸ் தருகிறார். காரணம் பல் மருத்துவர்கள் எப்போதும் அன்பாக பழகுவார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறாராம்.
மகளிர்க்கு மட்டும்...
இந்த சேவை தற்போதைக்கு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சீக்கிரமாவே, குமுறிக் குமுறி அழும் ஆண்களின் அழுவாச்சியைத் துடைக்கவும், பெண்களை களத்தில் இறங்கினால் நல்லது!