ஜித்தா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்திய சகோதரத்துவ சங்கமம்!
ஜித்தா: கடந்த வெள்ளியன்று மாலை ஜித்தா இம்தியாஸ் இஸ்திராஹா திறந்தவெளி அரங்கத்தில் சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சியை சவுதி அரேபியா மேற்கு மாகாண இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் தமிழ் பிரிவும், யுனிவர்சல் இன்ஸ்பெக்ஷன் கம்பெனியும் இணைந்து நடத்தியது.
மாலை 5 மணியளவில் சங்கமம் அரங்கினை மேற்கு மாகாண மத்திய கமிட்டி உறுப்பினர் உமர் ஹுசைன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் என தனித்தனியாக நடைபெற்றது.
கிராஅத், பாடல், வினாடி வினா போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் மேற்கு மாகாண தமிழ் பிரிவின் பொதுச் செயலாளர் நாஸர்கான் திறந்து வைத்தார். இந்தியாவின் பாரம்பரியம் குறித்த பல்வேறு ஆவணங்களை மக்கள் கண்டு ரசித்தனர்.
சங்கமத்தின் முத்தாய்ப்பாக மனமகிழ் குடும்பம் அமைப்பதற்கான ஆலோசனை கருத்தரங்கம் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் மஹ்பூப் ஷரீப் தலைமையிலும், யுனிவர்சல் இன்ஸ்பெக்ஷன் கம்பெனியின் தம்மாம் பகுதி கோஆர்டினேட்டர் குலாம் காதிர் முன்னிலையிலும் நடைபெற்றது.
முன்னதாக தவ்பிக் திருமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். அல் அமான் வரவேற்புரையாற்றினார். ஃப்ரட்டர்னிட்டி ஃபோரத்தின் தன்னார்வ சேவைகளை ஃபோரத்தின் தமிழ் பிரிவு செயலாளர் சேக் அப்துல்லாஹ் எடுத்துரைத்தார்.
ஃபோரத்தின் ரியாத் தமிழ் பிரிவு செயற்குழு உறுப்பினர் மௌலவி ஷர்புத்தீன் அல்தாபி மனமகிழ் குடும்பம் எவ்வாறு அமைப்பது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சகோதரத்துவ சங்கமம் ஏன் என்ற தலைப்பில் மஹ்பூப் ஷரீப் அறிமுக உரையாற்றினார்.
நிறைவாக போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும், சிறப்பு விருந்தினர்கள், நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெண்களுக்கான கைவினைப்பொருட்கள் தயாரிப்பு போட்டியில் வென்றவர்களுக்கு விமன்ஸ் ஃப்ரட்டர்னிட்டி ஃபோரத்தின் பொறுப்பாளர்கள் சிறப்பு பரிசுகள் வழங்கி கைவினைப்பொருள் உற்பத்தியை ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிர்ஷ்டசாலி குடும்பம் மற்றும் தனி நபருக்கான குலுக்கல் நடைபெற்று பம்பர் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சகோதரர் ஜமீல்தீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அமீர் சுல்தான் தொகுத்து வழங்கினார். இச்சங்கமத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், மனதிற்கு உற்சாகமாகவும் இருந்ததாக அனைவரும் கூறினர்.