ஜெட்ப்ளூ விமானத்தில் சக பயணிகள் மீது சிறுநீர் கழித்த வாலிபர்
போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் பயணி ஒருவர் விமானத்தில் சக பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் ஆன்கரேஜில் இருந்து ஜெட்ப்ளூ விமானம் ஒன்று ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டிற்கு கிளம்பியது. விமானத்தில் ஏறியதும் போர்லேண்டைச் சேர்ந்த ஜெப். டி. ரூபின்(27) என்பவர் தூங்கிவிட்டார். விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கையில் அவர் கண்விழித்தார்.
தனது இடத்தில் இருந்து எழுந்த அவர் இருக்கைகளின் இடைவெளி மூலமாக தனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் மீது சிறுநீர் கழித்தார். அப்பொழுது அவர் நிலை தடுமாறி கீழே விழ அவர் அருகே அமர்ந்திருந்தவர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீதும் சிறுநீர் பட்டது.
அதன் பிறகு ரூபின் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து தூங்கிவிட்டார். இதற்கிடையே விமான சிப்பந்திகள் இது குறித்து போர்ட்லேண்ட் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விமானம் போர்ட்லேண்டில் தரையிறங்கியதும் போலீசார் வந்து ரூபினை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
5 மணிநேரம் சிறையில் இருந்த ரூபின் பின்னர் ஜாமீனில் வெளியே சென்றார்.