காஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டு ஆகஸ்ட் 5-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஆகஸ்ட் 5-ந் தேதியை இந்தியாவுக்கு எதிரான பிரசார ஆயுதமாக பயன்படுத்துவதற்காக சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாமல் ஜம்மு காஷ்மீருக்கு பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை வழங்க வகை செய்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்த காலத்தில் அந்த மாநிலத்துக்கு தனி கொடி, தனி பிரதமர், அரசியல் சாசனம் என பல்வேறு சிறப்பு உரிமைகளை வழங்கியது இந்த 370-வது பிரிவு.
Recommended Video
ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் 370-வது பிரிவின் அம்சங்கள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு பிற மாநிலத்தவர் நிலம் வாங்க தடை என்பது உள்ளிட்ட சொற்ப சரத்துகளுடன் நீர்த்துப் போன ஒன்றாகவே 370-வது பிரிவு இருந்தது. ஆனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒன்றுதான் - ஒரே இந்தியாதான் என்கிற கொள்கையை வலியுறுத்தும் பாஜக 370-வது பிரிவை நிச்சயம் நீக்குவோம் என்பதை நீண்டகாலமாக சொல்லி வந்தது.
முழு கொள்ளளவை எட்டிய வீராணம்.. 43 மடங்கு தரமான சம்பவத்தை தரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்!
காஷ்மீர் 370வது பிரிவு ரத்து
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு திடீரென நீக்கியது. இதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நிறைவேறியது. முன்னதாக ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கில் சிறைவைக்கப்பட்டனர். பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டு போராட்டங்கள் எதுவும் நடைபெறாத வகையில் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. சர்வதேச அளவிலும் 370-வது பிரிவு ரத்தானது பெரும் சர்ச்சையானது.
வரைபடங்களே மாற்றம்
அத்துடன் மத்திய அரசின் செயல்பாடுகள் முடியவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் நிலமும் இந்தியாவுக்கு உரியது என்று பிரகடனப்படுத்தப்பட்ட கையுடன் புதிய இந்திய வரைபடமும் வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஒட்டுமொத்த காஷ்மீர் நிலப்பரப்பும் இந்தியாவுக்கு சொந்தமானது என இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆட்சேபங்களை தெரிவிக்கத்தான் செய்தன.
ஓராண்டு நிறைவும் பாக். சதியும்
இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளை இந்தியா அதிரடி நடவடிக்கைகள் மூலம் எந்த நேரத்திலும் கைப்பற்றலாம் என்கிற எதிர்பார்ப்பு எல்லையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவுக்கு எதிராக எந்த துரும்பையும் கிள்ளிப் போட திராணியற்ற பாகிஸ்தான் இப்போது ஆகஸ்ட் 5-ந் தேதியை முன்வைத்து சர்வதேச அரங்கில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை வலிமையாக்கிக் கொள்ள முடியுமா? என கணக்குப் போட்டு இலவு காத்து கொண்டிருக்கிறது.
ஆக.5 கறுப்பு நாள்
முதல் கட்டமாக ஆகஸ்ட் 5-ந் தேதியை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்கிறது பாகிஸ்தான். இந்திய அரசானது இந்திய மாநிலம் தொடர்பாக மேற்கொண்ட ஒருநடவடிக்கைக்கு கறுப்புதினத்தை அனுசரிக்கிறதாம் பாகிஸ்தான். இதற்கு அப்பால் பாகிஸ்தான் சரித்திரத்தில் புதிய நிகழ்வாக முதல் முறையாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முசாபர்பாத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டிருக்கிறது பாகிஸ்தான். இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அடுத்ததாக இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறோம் என நினைத்துக் கொண்டு இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது பாகிஸ்தான்.
பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு விருது
ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோருகிற இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பான அனைத்து ஹூரியத் கூட்டமைப்பின் தலைவராக் இருந்த கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய சிவில் விருது வழங்குவதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது. 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக காஷ்மீரத்தில் உக்கிரமான போராட்டங்கள் நடைபெறவில்லை என்கிற கோபத்தில் ஹூரியத் கூட்டமைப்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் கிலானி. இந்த கிலானிக்குதான் பாகிஸ்தான் தமது நாட்டின் உயரிய விருதை வழங்கப் போகிறதாம். இதற்கு அடுத்ததுதான் பாகிஸ்தானின் சர்வதேச சேட்டைகள்.
கூட்டாளி நாடுகளுடன் கை கோர்ப்பு
370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவை விமர்சித்தவை பாகிஸ்தான், துருக்கி, மலேசியா, சீனா. மலேசியாவுக்கு இந்தியா வர்த்தக ரீதியிலான பதிலடி கொடுத்த பின்னர் தற்போது அதன் போக்கில் மாற்றங்களை காண முடிகிறது. தற்போது இந்தியாவின் எதிர்ப்பு நாடுகளான சீனா, துருக்கி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து ஆகஸ்ட் 5-ந் தேதியன்று இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை பெரிய அளவில் நடத்துவது என பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாம். பாகிஸ்தான் ஊடகங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து எப்படியெல்லாம் பூதாகரப்படுத்தி விஷம பிரசாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளாராம்.
18 அம்ச சதித் திட்டத்துடன் இம்ரான்கான்
சமூக வலைதளங்களில் ஜம்மு காஷ்மீர் நிலவரங்கள், தலைவர்கள் கைதுகள், மக்கள் நடத்திய போராட்டங்கள் ஆகியவை குறித்து விரிவான பிரசாரம் செய்வது என்பதும் இன்னொரு திட்டமாம். அதேபோல் ஆகஸ்ட் 5-ந் தேதியன்று சீனா, துருக்கி, மலேசியா நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளப் பெற்று இந்திய எதிர்ப்பை கூர்மைப்படுத்த வேண்டும் என்பதும் இம்ரான்கானின் திட்டமாம். 370-வது பிரிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் தெரிவித்த கண்டனங்களையும் தமக்கு சாதகமான ஒரு பிரசார கருவியாக்குவதையும் வலிமைப்படுத்துவதும் இம்ரான்கானின் ப்ளான். இப்படி ஆகஸ்ட் 5-ந் தேதியை மொத்தம் 18 அம்சங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களுடன் எதிர்கொள்வது என்கிற முனைப்பில் இருக்கிறாராம் இம்ரான்கான்.