சிங்கப்பூரின் தந்தை லீக்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அஞ்சலி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவிற்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவ் நிமோனியாவால் கடந்த 23ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் உறுப்பினர்கள், சிங்கப்பூர் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த துணை அமைச்சருமான திரு. மசகோஸ் ஜூல்கிஃபிலியுடன் இணைந்து, சிங்கப்பூரில் அமைக்கப்பட்டஅனுதாபக் கூடத்தில் கடந்த 27ம் தேதி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, அவர்களின் இறுதி மரியாதையைத் தெரிவித்தனர்.
"சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கி, தமிழையும் தமிழர்களையும் செழிப்போடு வாழ வகை செய்த திரு லீ, ஒவ்வொரு உள்ளத்திலும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்"என்ற குறிப்பை இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்தார், சங்கத்தின் தலைவர் முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்.
சிங்கப்பூரின் தந்தையாகவும், இவ்வுலகின் விந்தையாகவும் வாழ்ந்து காட்டிய உன்னத மாமனிதர் திரு. லீ குவான் யூவ் என்று அச்சங்கத்தினர் புகழாரம் சூட்டினர்.