அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபர் ஜோ பிடன் போட்டி?
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் ஜோ பிடனும் களமிறங்குவார்; இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக ஹிலாரி கிளிண்டன் களத்தில் குதித்துள்ளார். மாகாணங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடத்தில் ஆதரவு திரட்டி வருகிறார்.
I have a very good source close to Joe that tells me VP Biden will run for Prez
— US Rep Brendan Boyle (@RepBrendanBoyle) October 19, 2015
இதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் பெர்னி ஸாண்டர்ஸும் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த பல மாதங்களாகவே துணை அதிபர் ஜோபிடனும் போட்டியிடப் போவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் ஜோபிடன் மகன் புற்றுநோயால் காலமானதைத் தொடர்ந்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக ஜோபிடன் களமிறங்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது. கடந்த 1988, 2008-ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வில் ஜோபிடனும் இருந்தவர்தான். 2009ஆம் ஆண்டு முதல் துணை அதிபராக இருந்து வருகிறார்.
இருந்த போதும் ஹிலாரி மற்றும் பெர்னி ஸாண்டர்ஸ் இருவரும் கணிசமான நிதி திரட்டி தேர்தல் களத்தில் பல படிகளைக் கடந்துவிட்டனர். ஆனால் தேர்தலில் போட்டியிடுவேனா? இல்லையா? என்பதையே கூட ஜோபிடன் அறிவிக்காமல் இருக்கிறார்.
தற்போது அவர் தாமும் போட்டியிட இருக்கிறேன் என்று அறிவித்தாலும் கூட ஹிலாரி, பெர்னி அளவுக்கு ஆதரவைத் திரட்டிவிட முடியுமா? என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
அதேநேரத்தில் ஹிலாரி கிளிண்டன் செல்வாக்கு சரிந்திருப்பதாக ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் ஜோபிடனே சரியான தேர்வாக இருக்கும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ஜோபிடனின் நெருக்கமான ஆலோசகரான டெட் காஃப்மன், ஜனநாயகக் கட்சியினருக்கு கடந்த வியாழன்று ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் நிச்சயம் தேர்தல் களத்துக்கு ஜோபிடன் வருவார்.. அவரது பிரசாரம் தொய்வின்றி நடைபெறும் என கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியது.
இன்று கூட அமெரிக்கா எம்.பி. பிரெண்டன் போய்லி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜோபிடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஜோபிடன் களத்தில் குதித்தால் அவருக்கு ஆதரவளிப்போம் என்ற குரல் பல்வேறு குழுக்களிடம் இருந்து வெளிப்பட்டும் வருகிறது. இதனால் தேர்தல் களத்தில் குதிப்பது குறித்து எந்த நிமிடத்திலும் ஜோபிடன் அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.